ஊழியர்களைப் பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பதற்கும், குழந்தைகளை வளர்ப்பதில் குடும்பங்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதற்கும் சிங்கப்பூர் மேற்கொண்டுள்ள முயற்சிகள், ஒவ்வோர் உறுப்பு நாட்டின் மனித உரிமைகள் பதிவேடு குறித்த வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் (ஐநா) சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட சிங்கப்பூரின் அண்மைய அறிக்கையில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளன.
ஐநா இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள இந்த அறிக்கை, சிங்கப்பூரில் நிலவும் மனித உரிமைகள் நிலைமையை மதிப்பீடு செய்ததுடன், 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி உலகளாவிய காலமுறை ஆய்வின்போது அது ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் அடைந்த முன்னேற்றத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்த உலகளாவிய காலமுறை ஆய்வு, ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐநாவின் 193 உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் பதிவேடுகளை ஆய்வு செய்கிறது. இதன் மதிப்பீடு, ஆய்வுக்குட்பட்ட நாடு, அதன் குடிமைச் சமூக அமைப்புகள், அத்துடன் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
2021ல் நடைபெற்ற அதன் முந்தைய உலகளாவிய காலமுறை ஆய்வைத் தொடர்ந்து, பெறப்பட்ட 324 பரிந்துரைகளில் 210ஐ சிங்கப்பூர் ஆதரித்தது. 2016ல் பெறப்பட்ட 236 பரிந்துரைகளில் 125ஐ அது ஆதரித்திருந்தது.
சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சமத்துவம், பாகுபாடின்மையில் சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக அண்மைய தேசிய அறிக்கை தெரிவித்தது.
2027ஆம் ஆண்டின் இறுதியில் நடைமுறைக்கு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியிட நியாயச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும், வயது, குடியுரிமை, பாலினம், திருமண நிலை, கர்ப்ப நிலை, பராமரிப்புப் பொறுப்புகள், இனம், சமயம், மொழி, இயலாமை, மனநலக் குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்யும்.
விரிவான பொது ஆலோசனைகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களைத் தொடர்ந்து, ஓரினச்சேர்க்கையைக் குற்றமாக்கிய காலனித்துவ காலச் சட்டமான 377A பிரிவை அரசாங்கம் ரத்து செய்ததாக அது மேலும் தெரிவித்தது. இது 2023 ஜனவரி 3ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
திருமணத்தை வரையறுப்பது, ஒழுங்குபடுத்துவது, பாதுகாப்பது, பேணுவது, ஆதரிப்பது, வளர்ப்பது, ஊக்குவிப்பது ஆகியவை நாடாளுமன்றத்தின் கடமை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், நாடாளுமன்றம் அரசியலமைப்பின் 156வது பிரிவை ஒரே நேரத்தில் இயற்றியது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் சமநிலையான அணுகுமுறை, சமூகத்தின் ஒருமித்த கருத்தை நிலைநிறுத்தும் அதே வேளையில், சமூக மனப்பான்மைகளில் ஏற்படும் மாற்றங்களுக்குப் பதிலளிப்பதில் சிங்கப்பூரின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது,” என்று அறிக்கை கூறியது.
கடந்த பத்தாண்டுகளில் அரசாங்க ஆதரவுடனான பாலர்பள்ளி இடங்கள் சீராக அதிகரித்ததன் மூலமும், ஆரம்பகால குழந்தைக் கல்விக்காக ஆண்டுதோறும் 2 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டதன் மூலமும், 2025ஆம் ஆண்டில் பாலர்பள்ளி மட்டத்தில் 93 விழுக்காடு மாணவர் சேர்க்கையைச் சிங்கப்பூர் அடைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.

