இன்று (செப்டம்பர் 8) முதல், காவல்துறையின் பெரும்பாலான மின்னிலக்கச் சேவையைப் பொதுமக்கள் பெற, தங்களின் சிங்பாஸ், கார்ப்பாஸ் (Corppass) வழியாக உள்நுழைய வேண்டும்.
தரவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பொதுமக்களுக்கு மிகவும் எளிதான இணைய அனுபவத்தை வழங்கவும் காவல்துறையால் எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதி இந்த மாற்றம் என்று நேற்று (செப்டம்பர் 7) வெளியிட்ட ஓர் அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
வயது முதிர்ந்தோருக்கான ஓட்டுநர் மருத்துவப் பரிசோதனை அறிக்கை, தகுதியான ஓட்டுநர் உரிமம் கோருதல் போன்ற சில மின்னிலக்கச் சேவைகளைப் பெற சிங்பாஸ் வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.
ஓட்டுநர் மேம்பாட்டுப் புள்ளிகளின் நிலை, காவல்துறை ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகலுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைக்கு சிங்பாஸ் அல்லது கார்ப்பாஸ் வழியாக உள்நுழைய வேண்டும்.
சிங்பாஸ் அல்லது கார்ப்பாஸ் கணக்கு இல்லாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், அவற்றின் இணையத்தளங்களில் நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம்.
காவல்துறையின் இணையத்தளம், திங்கட்கிழமை புதுப்பிக்கப்படவுள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை அந்த இணையத்தளம் செயல்படாது. மறுநாள் நள்ளிரவு முதல் காலை 8 மணி வரையும் அது தடைபடும் சாத்தியம் உள்ளது.