வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும்பாலான அஞ்சல்களுக்கு 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 7ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பை சிங்போஸ்ட் வெளியிட்டது.
‘ஏரோகிராம்’ எனப்படும் விமானம் வழி அனுப்பப்படும் கடிதங்கள், அச்சிட்ட தாள்கள், அஞ்சல் அட்டைகள் போன்றவற்றுக்கு இது பொருந்தும்.
இருப்பினும், மலேசியாவுக்கும் புருணைக்கும் அனுப்பப்படும் ‘ஏரோகிராம்’களுக்கு அஞ்சல் கட்டணத்தில் மாற்றம் இல்லை.
20 கிராம் வரையிலான எடை கொண்ட அத்தகைய ஒரு கடிதத்திற்கு தற்போது வசூலிக்கப்படும் 80 காசு கட்டணம் தொடர்ந்து நடப்பில் இருக்கும். அவ்விரு நாடுகளுக்கும், கூடுதல் எடைக்காக செலுத்தப்படும் அஞ்சல் கட்டணத்திலும் மாற்றமில்லை என்று சிங்போஸ்ட் கூறியது.
மற்ற நாடுகளுக்கான ‘ஏரோகிராம்’ கட்டணம் (20 கிராம் வரையிலான எடையுள்ள அஞ்சல்களுக்கு) இனி 85 காசாக இருக்கும்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக அஞ்சல் சங்கத்தின் வருடாந்தர கட்டண மறுஆய்வை அடுத்து, இவ்வாறு கட்டணம் உயர்த்தப்படுவதாக சிங்போஸ்ட் தெரிவித்தது.
கடிதங்கள் எந்த நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனவோ அந்த நாட்டின் அஞ்சல் அமைப்புகளுக்கு, விநியோகக் கட்டணம் உயர்ந்திருப்பதை அது சுட்டியது.
பொதுவில், சிங்கப்பூரிலிருந்து கடிதங்கள் அனுப்பப்படும் வெளிநாடுகள் மூன்று வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
புருணையும் மலேசியாவும் முதல் வட்டாரமாகக் கருதப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகள் தவிர்த்த ஏனைய ஆசிய பசிபிக் நாடுகள் இரண்டாவது வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த மூன்று நாடுகளுடன், உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் மூன்றாவது வட்டாரமாகக் கருதப்படுகின்றன.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
முன்னதாக, பொருள், சேவை வரி உயர்வுக்கு ஏற்றவாறு 2023 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அஞ்சல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக சிங்போஸ்ட் அறிவித்திருந்தது.
பின்னர், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் வழக்கமான அஞ்சல் கட்டணம் 20 காசு உயர்த்தப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்ட அஞ்சல் கட்டணம் அதுவே முதல்முறை.
புதிய அஞ்சல் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, டிசம்பர் 7ஆம் தேதி காலை சிங்போஸ்ட் பங்குகளின் விலை அதிகரித்தது.