உள்நாட்டு அஞ்சல் கட்டணம் 20 காசு உயர்த்தப்படவிருப்பதாக சிங்கப்பூர் அஞ்சலகம் (சிங்போஸ்ட்) செவ்வாய்கிழமை தெரிவித்தது.
இந்த விலையுயர்வு அக்டோபர் 9ஆம் தேதி நடப்புக்கு வரும் என அது கூறியது.
“தற்போது 31 காசாக இருக்கும் உள்ளூர் அஞ்சல் கட்டணம் 51 காசாக உயர்த்தப்படும். இந்த விலை உயர்வு அஞ்சல் சேவையை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் செலவினங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்,” என சிங்போஸ்ட் குறிப்பிட்டது.
அதிகரித்துவரும் செலவினங்களைச் சமாளிக்கும் வகையில், அக்டோபர் இறுதியிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் 10 அஞ்சல்தலைகளைக் கொண்ட ‘ஃபர்ஸ்ட் லோக்கல்’ அஞ்சல்தலை தொகுப்பை சிங்போஸ்ட் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடைசியாக, 2014ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் அஞ்சல்தலை கட்டண உயர்வு இடம்பெற்றிருந்தது.
அவ்வாண்டு 22 காசாக இருந்த அஞ்சல் கட்டணம் 30 காசாக உயர்த்தப்பட்டது.
அதற்குப் பிறகு உள்நாட்டு அஞ்சல் கட்டணங்கள் பெரும்பாலும் மாற்றமின்றி இருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.