சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில் $4.1 மில்லியன் செயலாக்க லாபத்தை ஈட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 55.2 விழுக்காடு அதிகம்.
சென்ற ஆண்டில் ஈட்டப்பட்ட லாபத்தின் மதிப்பு $2.6 மில்லியன்.
செலவு நிர்வாகம், குறைவான ஊழியர் தொடர்பான செலவுகள், செயல்திறன் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி சாத்தியமானது என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 26) சிங்போஸ்ட் கூறியது.
செயல்பாட்டு லாப வரம்பு முந்திய ஆண்டின் 2.8 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாக விரிவடைந்தது.
முதல் காலாண்டின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.9 விழுக்காடு சிறிதளவு சரிந்து $94.2 மில்லியனிலிருந்து $93.4 மில்லியனுக்குக் குறைந்துள்ளது.
தளவாட, அஞ்சல் பிரிவுகளில் காணப்பட்ட ஏற்ற இறக்கமான செயல்பாட்டை அஞ்சல் நிலையக் கட்டமைப்பு, சொத்து சார்ந்த பிரிவுகளில் கிடைத்த வருவாய் வளர்ச்சி பெருமளவு ஈடுகட்டியதாக சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் கட்டண உயர்வு, உள்ளூர் அஞ்சல் செயல்பாட்டின் சரிவைச் சமாளிக்க உதவியது என்றும் அது குறிப்பிட்டது.
செயல்பாட்டுச் செலவு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2.4 விழுக்காடு குறைந்து $91.5 மில்லியனிலிருந்து $89.3 மில்லியனானது.


