கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் மில்லியன்கணக்கான தொலைபேசி அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் முடக்கியதாக சிங்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசடியுடன் தொடர்புடையவை என்ற சந்தேகத்தின் பேரில் 30 மில்லியனுக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளையும் 20 மில்லியனுக்கும் அதிகமான குறுஞ்செய்திகளையும் முடக்கியதாக அது கூறியது. அதாவது அந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 360 மில்லியன் அழைப்புகளும் 240 மில்லியன் குறுஞ்செய்திகளும் முடக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட்ட நிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை அறிக்கையில் இந்தத் தகவல்களை அது குறிப்பிட்டுள்ளது.
மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மோசடிக்காரர்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட சிங்டெல் பேச்சாளர், மோசடித் தடுப்பு நடவடிக்கைகளைத் தங்கள் நிறுவனமும் அதிகரித்திருப்பதாகக் கூறினார்.
சில குறிப்பிட்ட நடைமுறைகளை அடையாளம்காணுதல் (pattern recognition), இயந்திரக் கற்றல் திறன் (machine learning) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்களை மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகளிலிருந்து காப்பாற்றியதாக சிங்டெல் கூறியது.
இந்நிலையில், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள், 2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 260 மில்லியனுக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளும் 40 மில்லியனுக்கும் அதிகமான குறுஞ்செய்திகளும் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் முடக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனும் காவல்துறையுடனும் இணைந்து பல்வேறு தொடர்பு வழிகளின் மூலம் மோசடி முயற்சிகளை இடைமறித்து முடக்கியதாக ஆணையம் கூறியது.

