தொழில்நுட்பக் கோளாற்றால் சிங்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5ஜி சேவைகள் செவ்வாய்க்கிழமை முற்பகலில் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இதனால் நூற்றுக்கணக்கான பயனர்கள் கைப்பேசி இணையச் சேவையில் பாதிப்பை எதிர்கொண்டனர்.
பின்னர் கோளாறு முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக சிங்டெல் நிறுவனம் தெரிவித்தது.
“பாதிக்கப்பட்ட 5ஜி பயனர்களுக்கு கைப்பேசி இணையச் சேவைகள் விட்டுவிட்டுக் கிடைத்த நிலையில், அப்பிரச்சினைஅ முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிட்டது. பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” எனப் பிற்பகல் 1.30 மணியளவில் சிங்டெல் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்தது.
பயனர்கள் காலை 9.06 மணி முதல் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்துப் புகாரளிக்கத் தொடங்கினர்.
காலை 10.20 மணியளவில் கிட்டத்தட்ட 400 பயனர்கள் இது குறித்துப் புகார் அளித்ததாக டௌன்டிடெக்டர் இணையத்தளம் குறிப்பிட்டது.