சிங்டெல் கைப்பேசிச் சேவையில் திங்கட்கிழமை (மார்ச் 16) காலை இடையூறு ஏற்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்த அச்சேவை அன்றைய தினம் மாலை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியதாகச் சிங்டெல் தெரிவித்துள்ளது.
எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த 4ஜி, 5ஜி கைப்பேசிச் சேவை பாதிப்பு, இரவு 7:09 மணிக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், இணையத் தாக்குதல் நடந்ததற்கான எந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லை என அந்நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம், சிங்கப்பூரின் நான்கு முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இணையத் தாக்குதலுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சிஎன்ஏ செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், “எந்தவொரு சேவை பாதிப்பையும் நாங்கள் தீவிரமாகக் கருதுகிறோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்,” என்று கூறியது.
மார்ச் 16ஆம் தேதி காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சேவை பாதிப்பால், ஆயிரக்கணக்கான சிங்டெல் பயனர்கள் தங்களின் கைப்பேசிச் சேவையில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
அதன் காரணமாகச் சிலர் பொருள்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், பணி நிமித்தமாகக் கைப்பேசி மூலமாக இணையத்தைப் பயன்படுத்த முடியாமலும் சிரமப்பட்டனர்.


