சிங்கப்பூரில் திங்கட்கிழமை (மார்ச் 16) காலை சிங்டெல் சேவையில் இடையூறு ஏற்பட்டது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
காலை 11 மணிவாக்கில் டௌன்டிடெக்டர் (Downdetector) என்னும் தளத்தில் 5,200க்கும் அதிகமானவர்கள் சேவைத் தடை குறித்துப் பதிவிட்டனர்.
இணையத்தளங்கள், செயலிகள், சேவைகள் போன்றவை முடங்கினால் டௌன்டிடெக்டர் தளத்தில் அண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ளமுடியும்
சிங்டெலின் கைப்பேசிச் சேவையில் காலை 10.15 மணிக்கு இடையூறு ஏற்பட்டதாக அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நேரம் பாதிக்கப்பட்டதாக நான்கு பேர் பதிவிட்டிருந்தனர்.
சேவை இடையூறு குறித்து விசாரித்து வருவதாக, சிங்டெல் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
எதனால் இடையூறு ஏற்பட்டது என்பதைப் பொறியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தற்போது பிரச்சினை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் பிற்பகல் மணி 12.01க்கு வெளியிட்ட பதிவில் சிங்டெல் குறிப்பிட்டது.
பிரச்சினைக்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை.
சேவைத் தடங்கலுக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது சிங்டெல்.

