சிங்டெல், எம்1, ஸ்டார்ஹப் ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் 3ஜி சேவையை 2024 ஜூலை 31ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
இந்த மூன்று நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 100,000 பேர் 3ஜி சேவை வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் பெருவாரியான வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையிலிருந்து 4ஜி, 5ஜிக்கு மாறிவிட்டனர் எனத் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) புதன்கிழமை தெரிவித்தது.
குரல், செய்தி, தரவு சேவைகள் உட்பட அனைத்து 3ஜி சேவைகளும் நிறுத்தப்படும் என அம்மூன்று நிறுவனங்களும் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
“3ஜி சேவையை நிறுத்துவதன்மூலம் விடுவிக்கப்படும் அலைக்கற்றைகளில் சிலவற்றை 5ஜி சேவைகளை மேம்படுத்தப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன்மூலம் விரைவான இணையச் சேவை, அதிகமான தரவுப் பரிமாற்றம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்க முடியும்,” என்று அந்நிறுவனங்கள் குறிப்பிட்டன.
தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்களது 3ஜி வாடிக்கையாளர்கள் 4ஜி, 5ஜி சேவைக்கு மாற உதவுவார்கள் என்றும் ஆணையம் தெரிவித்தது.
சில்லறை விற்பனையாளர்கள் இனி 3ஜி தொலைபேசிகள், 3ஜி சேவை மூலம் குரல் அழைப்புகளைப் பெறும் 4ஜி தொலைபேசிகளை விற்க முடியாது. இது 2024 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த அறிவிப்பு அவ்வகைக் கைப்பேசி ஏற்றுமதியைப் பாதிக்காது.