சிங்டெல் நிறுவனம் முதல் காலாண்டில் $2.9 பில்லியன் நிகர லாபம் ஈட்டியதாக புதன்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளது.
ஓராண்டுக்கு முன்புடன் ஒப்புநோக்க அது 317.4 விழுக்காடு அதிகம். சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் அது $690 மில்லியன் நிகர லாபம் ஈட்டியது.
‘ஏர்டெல்’ நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியை விற்றது, ‘இன்டச்-கல்ஃப்எனர்ஜி’ நிறுவன இணைப்பு ஆகியவற்றின் மூலம் கிடைத்த $2.2 பில்லியனால் இந்த லாப அதிகரிப்பு சாத்தியமானது.
இவ்வேளையில், ஆண்டு அடிப்படையில் சிங்டெல்லின் நிகர லாபம் 13.9 விழுக்காடு அதிகரித்து $686 மில்லியனாகப் பதிவானதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், இந்தியாவின் ‘ஏர்டெல்’ நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 1.2 விழுக்காட்டுப் பங்குகளை விற்றதன் மூலம் சிங்டெல் நிறுவனம் ஏறத்தாழ $1.5 பில்லியனை ஈட்டியது.
‘இன்டச்’ துணை நிறுவனத்தைத் தாய்லாந்தின் ‘கல்ஃப்எனர்ஜி’ நிறுவனத்துடன் இணைத்ததன் மூலம் சிங்டெல்லுக்கு $746 மில்லியன் நிகர லாபம் கிட்டியது.
முதலீடுகள், சொத்து விற்பனை மூலம் கிடைத்த வருவாய் தவிர்த்து முக்கிய வர்த்தக நடவடிக்கைகள் மூலம் ஈட்டிய வருவாய் நிலையாக $3.39 பில்லியனாகப் பதிவானது.
தாய்லாந்திலும் சிங்கப்பூரிலும் தரவு நிலையங்களை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2026ஆம் நிதியாண்டில் தன் தரவு நிலைய வர்த்தகம் சிறப்பாகச் செயல்படும் என்று சிங்டெல் எதிர்பார்க்கிறது.
தொடர்புடைய செய்திகள்
நீடித்த நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் செயலாக்க ஒழுங்கு, சீரான நடமுறையாக்கத்தில் கவனம் செலுத்தப்படும் என்று அது கூறியது.