தீவு விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27ஆம் தேதி) ஏற்பட்ட விபத்தில், ஒரு டாக்சி உட்பட, ஆறு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இதில் இரண்டு கார்கள் தீக்கிரையாகின.
இது பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறையும் குடிமைத் தற்காப்பு படையும், சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையின் பாய லேபார் வெளிவழிச் சாலையில் இரவு சுமார் 10.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தன.
இதில் ஒரு காரில் எற்பட்ட தீ பரவி பின்னாலிருந்த மற்றொரு காருக்கும் பரவியதாக காவல்துறை விளக்கியது.
இதில் ஐந்து கார் ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர் எவரும் காயமடையவில்லை என்று காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
இது பற்றி விவரிக்கும் ஆண்ட்ரு கோ என்ற துணைப்பாட ஆசிரியர், இரவு ஏறத்தாழ 10.20க்கு தான் அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்ததாகவும் அப்பொழுது தனக்கு மேலே இருந்த விரைவுச்சாலையில் ஆரஞ்சு வண்ண ஒளிப்பிழம்பு தெரிந்ததாகக் கூறினார்.
அது விரைவிலேயே தீயாக மாறியதுடன் அதைத் தொடர்ந்து விபத்து நடந்த பகுதியிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக அந்த 35 வயது ஆடவர் தெரிவித்தார்.
இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த கம்ஃபர்ட் டெல்குரோ, “விபத்து நடந்த சமயம் டாக்சியில் பயணிகள் எவரும். மேலும், எங்கள் டாக்சி ஓட்டுநருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதில் காவல்துறை மேற்கொண்டு வரும் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்,” என்று அதன் பேச்சாளர் ஒருவர் விளக்கமளித்தார்
தொடர்புடைய செய்திகள்
விபத்து குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது.