ஆயுதம் ஏந்தியவாறு கிங் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள உயர்தர பங்களா வீட்டிற்குள் புகுந்து $4.3 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கம், விலை உயர்ந்த பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பலில் ஒருவர் என நம்பப்படும் ஆடவர் மீது நவம்பர் 5ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலேசியரான 33 வயது வோங் சி ஷான், ஏப்ரல் 18ஆம் தேதியன்று நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இவர் அந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறாவது ஆடவர்.
கூடுதல் விசாரணை நடத்த அவர் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார்.
நவம்பர் 12ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 28 வயது கோ பூன் டோங், 32 வயது முகம்மது தௌஃபிக் அகமது ஃபௌஸி ஆகிய இருவர் மீது மே 2ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டது.
31 வயது கார்த்திக் பழனியப்பன், 47 வயது முகம்மது ஹமிடோன் அகமது, 49 வயது முகம்மது ஹஷிம் இஸ்மாயில் ஆகியோர் மீது மே 8ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் மலேசியர்கள்.
அரிவாள், பேஸ்பால் மட்டைகள் ஆகியவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி 11 பேரிடமிருந்து கொள்ளையடித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன.
மேலும் ஒருவர் இந்தக் கொள்ளைக் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

