ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அண்மைய ஓசிபிசி வங்கியின் சிறிய, நடுத்தர நிறுவனக் குறியீடு, சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ) 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விரிவடைந்துள்ளன என்பதைக் குறிப்பிட்டது.
வளர்ச்சி பரந்த அடிப்படையிலானது. ஆனால். சீரானது அல்ல. உற்பத்தி, மொத்த வர்த்தகம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ஐசிடி) போன்ற வெளிப்புற நோக்குடைய தொழில்கள் உள்நாட்டு நோக்குடைய தொழில்களைவிட சிறப்பாகச் செயல்பட்டன.
எஸ்எம்இக்களின் வர்த்தக ஆரோக்கியம் மற்றும் செயல்திறனைக் கண்காணிக்கும் காலாண்டு குறியீடு, மூன்றாவது காலாண்டில் 50.5 ஆக இருந்ததிலிருந்து, நான்காம் காலாண்டில் 50.8 ஆக உயர்ந்தது.
இது தொடர்ச்சியான மூன்றாவது காலாண்டு விரிவாக்கத்தைக் குறித்தது என்றும் நான்காவது காலாண்டு வளர்ச்சியின் வலுவான வேகத்தைக் காட்டியது என்றும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஓசிபிசி உலகளாவிய வணிக வங்கியின் தலைவர் எலைன் ஹெங் கூறினார்.
குறியீட்டில் 50 புள்ளிகளுக்கு மேல் இருப்பது ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட வணிகச் செயல்பாடு அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது. அதேநேரத்தில் 50 புள்ளிகளுக்குக் கீழே இருப்பது ஒரு சுருக்கத்தைக் குறிக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள 100,000க்கும் மேற்பட்ட ஓசிபிசி எஸ்எம்இ வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தரவுகளிலிருந்து இந்தக் குறியீடு தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றின் ஆண்டு வருவாயும் $30 மில்லியன் வரை உள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில், நான்காம் காலாண்டில் ஒட்டுமொத்த வசூல் 11.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் வழங்கீடுகள் 10.7 விழுக்காடு அதிகரித்துள்ளன.
இருப்பினும், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி குறைந்து ‘நடுநிலையை’ நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று திருவாட்டி ஹெங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வட்டாரத்தில் அதிக செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் வலுவான சந்தைப் போட்டி இதன் காரணமாகும். அதே நேரத்தில் புவிசார் அரசியல் மோதலிலிருந்து வரும் நிச்சயமற்ற தன்மை வர்த்தக நம்பிக்கை மற்றும் தேவையையும் பாதிக்கலாம்.
பகுதி மின்கடத்திகள், மருந்துப் பொருள்கள் மீதான அமெரிக்க வரிகளின் தாக்கமும் இன்னும் நீங்கவில்லை என்று திருவாட்டி ஹெங் மேலும் கூறினார்.

