டிபிஎஸ் அறநிறுவனம் வழங்கிய $1.47 மில்லியன் நன்கொடை மூலம் மூத்தோருக்கான சிறு பணிகள் தொடர்பான விரிவாக்கப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 18 துடிப்புடன் மூப்படையும் நிலையங்களைச் சேர்ந்த 700 மூத்தோர், தாய் ஹுவா குவான் அறநிறுவனத்தின் சிறு பணிகள் திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
திங்கட்கிழமை (அக்டோபர் 13) முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தாய் ஹுவா குவான் அறநிறுவனம் மற்றும் டிபிஎஸ் அறநிறுவனத்தின் புதிய செயலியை மேம்படுத்த, நன்கொடையின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.
இச்செயலியைக் கொண்டு மூத்தோர் எளிதாக வேலை தேடலாம், வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம், செய்த வேலைக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் உள்ள மூத்தோருக்காக உருவாக்கப்படும் இச்செயலி அடுத்த ஆண்டின் முற்பாதியில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 100 துடிப்புடன் மூப்படையும் நிலையங்களில் இந்தச் சிறு பணிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம் 5,000 மூத்தோர் பலனடைவர்.
தொடர்புடைய செய்திகள்
மூத்தோருக்கு நீக்குப்போக்குள்ள, குறிப்பிட்ட பொறுப்பை இலக்காகக் கொண்ட வேலை கிடைக்க உதவுவதில் இந்தப் பங்காளித்துவத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
இதன் வழியாக மூத்தோர் சமுதாயத்துக்குப் பங்களிப்பதுடன் அவர்களது சமூக இணைப்புகளை மேம்படுத்திக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் அறிமுக விழா சிங்கப்பூர் தேசியக் காட்சிக்கூடத்தில் நடைபெற்றது.
இதில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டு பேசினார்.
ஒய்வுபெற்ற பிறகும் பயனுள்ள வகையில் செயல்படும் ஆற்றல் தங்களுக்கு இன்னமும் இருக்கிறது என்ற உணர்வை மூத்தோருக்கு இந்த சிறு பணிகள் திட்டம் ஏற்படுத்தித் தர உதவுவதாக அவர் கூறினார்.