பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி, தனது சேவைத் தரத்தை உயர்த்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த உள்ளது.
அந்தப் பயன்பாடு கைகூட சில ஆண்டுகள் ஆகும் என்றாலும் நடப்புக்கு வந்த பின்னர் ரயில்களின் தாமதம் குறையும்; கோளாறுகளைக் கண்டறிவதற்கு ஆகும் செலவு கட்டுக்குள் இருக்கும்.
ரயில் தொடர்பான கோளாறு நிகழும் முன்னரே அதனைக் கண்டறிந்து சீர்செய்ய ஜார்விஸ் (Jarvis) என்னும் செயற்கை நுண்ணறிவுத் தளம் எஸ்எம்ஆர்டிக்குக் கைகொடுக்கும்.
பராமரிப்புக் குழுக்கள் ஓர் எளிய ‘சாட்பாட்’ பாணியிலான இடைமுகத்தைப் பயன்படுத்தி, ரயில் கட்டமைப்புச் சாதனங்கள் எப்போது பழுதடையக்கூடும் என்பது குறித்த கணிப்புகளை விரைவாக எட்ட முடியும்.
அந்த விரைவான நடைமுறை, பழுதுகள் ஏற்படுமுன்னரே நடவடிக்கை எடுக்கவும் ரயில் போக்குவரத்தில் தாமதங்களைக் குறைக்கவும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் பயணிகளின் பயணங்களைப் பாதுகாப்பானதாக மாற்றவும் உதவும்.
எஸ்எம்ஆர்டியின் தொழில்நுட்பப் பிரிவான ஸ்ட்ரைட்ஸ் டெக்னாலாஜிஸ், ஆரக்கிள் நிறுவனத்துடன் இணைந்து ஜார்விஸ் தளத்தை உருவாக்கி உள்ளது. தற்போது ஏறத்தாழ 50 பயனாளர்கள் அதனைச் சோதனை முறையில் பயன்படுத்துகிறார்கள்.

