வீடுகளின் கூரைகளின்மீது பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தித் தகடுகளுக்குப் பதிலாக, சன்னல் கண்ணாடிகளோடு ஒன்றிணைந்து வெளியே தெரியாதவாறு அமைக்கக்கூடிய புதிய சூரியசக்தித் தகடுகளை சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மெல்லியதாகவும் ஒளியைக் குறிப்பிட்டளவு ஊடுருவச் செய்யக்கூடியதாகவும் இருக்கும் புதிய சூரியசக்தித் தகடுகளை வெற்றிகரமாக அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான சூரியசக்தித் தகடுகள் சிலிக்கானைக் கொண்டு தயாரிக்கப்படுபவை.
ஆனால், பூமியில் பெருமளவில் கிடைக்கக்கூடிய ‘பெரோவ்ஸ்கைட்’ எனப்படும் பகுதி மின்கடத்திப் பொருளைப் பயன்படுத்தி இந்தப் புதிய சூரியசக்தித் தகடுகளை ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். 2009ஆம் ஆண்டில்தான் முதன்முதலில் இந்தப் பகுதி மின்கடத்தி சூரியசக்தித் தகடுகளில் பயன்படுத்தப்பட்டது.
இந்த ‘பெரோவ்ஸ்கைட்’ சூரியசக்தித் தகடுகள், வழக்கமானதைவிட முற்றிலும் மாறுபட்டது. சூரிய ஒளி நேரடியாகக் கிடைக்காத போதிலும், மறைமுகமாகவோ அல்லது சிதறியோ வரும் ஒளியின் மூலம்கூட இவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
சிங்கப்பூரின் நகர்ப்புறச் சூழலுக்கு இத்தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

