சிங்கப்பூரில் சிக்கியிருந்த வெளிநாட்டினர் சிலர் ஓமான் சென்றனர்

சிங்கப்பூரில் சிக்கியிருந்த வெளிநாட்டினர் சிலர் ஓமான் சென்றனர்

1 mins read
ஹோட்டல்களில் கழகம் வெளியிட்ட அறிவிப்பின் வழியாக சிறப்பு விமானத்தில் இருக்கைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன.
edfad36b-5b4e-49a9-85fe-a436771eca63
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) ஓமான் சென்ற SQ8002 சிறப்பு விமானத்தில் பயணம் செய்த ஜெரமி பெரார்ட் 36, ஜொவனா கொன்கால்வ்ஸ் 31. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்குப் போர் தொடங்கியதால் விமானங்கள் ரத்தாகிச் சிங்கப்பூரிலேயே தங்க நேர்ந்த வெளிநாட்டுப் பயணிகள் சிலருக்கு ஓமான் செல்வதற்கான சிறப்பு விமானத்தைச் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் ஏற்பாடு செய்தது.

அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காலை 5.30 மணிக்கு ஒன்பது பயணிகளுடன் சாங்கி விமான நிலையத்திலிருந்து ஓமான் தலைநகர் மஸ்கட்டுக்குக் கிளம்பியது.

அங்குச் செல்லும் பயணிகள், மஸ்கட்டிலிருந்து ஐரோப்பிய நகரங்களுக்கும் வேறு இடங்களுக்கும் மாற்று விமானங்களில் செல்வர். அவ்வாறு மாற்று விமானப் பயண ஏற்பாடு இல்லாத சிலர் சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய முடியாது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ8002 விமானம் மஸ்கட் சென்றடைந்ததும் அங்கிருந்து மீண்டும் பயணிகளை அதே நாள் இரவு சிங்கப்பூர் அழைத்துவரும் விதமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

உதவி நாடி சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்துக்கு வெளிநாடுகளைச் சேர்ந்தப் பயணிகள் விண்ணப்பித்திருந்தனர். சிலர் வேறு இடங்களுக்குச் செல்லும் நோக்கில் சிங்கப்பூருக்கு ஒரு நாள் பயணமாக வந்து, போரினால் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல நாள்கள் தங்கித் தவித்தவர்கள் ஆவர்.

பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல்களில் கழகம் வெளியிட்ட அறிவிப்பின் வழியாகச் சிறப்பு விமானத்தில் இருக்கைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

சிறப்பு விமானத்தில் இருக்கைகள் கிடைக்காத, அடையாளம் வெளியிட விரும்பாத இருவர், மலேசியா வழியாக இத்தாலியின் ரோம் நகருக்குச் செல்ல மாற்று ஏற்பாடுகளைச் செய்யவிருப்பதாகக் கூறினர்.

குறிப்புச் சொற்கள்