அதிவேகமாக வாகனங்களை ஓட்டியது, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்படாமல் கனரக வாகனங்களை இயக்கியது ஆகிய குற்றங்களுக்காக பன்னிரண்டு வாகனவோட்டிகள்மீது ஏப்ரல் 28ஆம் தேதி குற்றம் சுமத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாகத் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 34 முதல் 70 வயதுக்கு உட்பட்ட 12 வாகனவோட்டிகள் பிடிப்பட்டதாகத் தெரிவித்தது.
இரு வெவ்வேறு சம்பவங்களில், 53 வயது, 61 வயதுடைய இருவர், பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 60 கி.மீ வேக வரம்பை மீறி, 73 கி.மீ வேகத்தில் பேருந்துகளை ஓட்டிச் சென்றது கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி 53 வயது ஆடவர் ஷியர்ஸ் அவென்யூவிலும் இவ்வாண்டு ஜனவரி 23ஆம் தேதி 61 வயது ஆடவர் சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையிலும் பிடிபட்டனர்.
இவ்வாண்டு ஜனவரி 15ஆம் தேதி, ஹாலுஸ் லிங்க் சாலையில் 40 கி.மீ வேக வரம்பைக் கொண்ட சிமெண்ட் கலவை வாகனத்தை , 57 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற 52 வயது ஆடவர் பிடிபட்டார்.
மற்றொரு 52 வயது நபர், பிப்ரவரி 8ஆம் தேதி ஷியர்ஸ் அவென்யூவில் ‘பிரைம் மூவர்’ லாரி ஒன்றை 72 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்றது கண்டறியப்பட்டது.
இது அந்த வாகனத்திற்கு விதிக்கப்பட்ட 50 கி.மீ வேக வரம்பைவிட 20 கி.மீக்கும் அதிகமான வேகமாகும்.

