சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவியத்தைத் திருடியதாக ஆஸ்திரேலியப் பெண் பயணி ஒருவர்மீது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈராண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்த 35 வயது ராஜ் வர்ஷா என்னும் அந்தப் பெண், வாசனைத் திரவியத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்டது.
சாங்கி விமான நிலையம் முனையம்-1ல் ஷில்லா என்ற வரிவிலக்குக் கடையில் $248 மதிப்புள்ள ஷெனெல் வாசனைத் திரவியத்தை வர்ஷா திருடியதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்ற அறிக்கை குறிப்பிட்டது.
சம்பவம் குறித்து 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது.
அதையடுத்து, சென்ற மாதம் மீண்டும் சிங்கப்பூர் வந்த வர்ஷாவை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
விமான நிலையத்தில் நடத்திய விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்கள், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் வர்ஷாவின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது.
வாசனைத் திரவியத்தைத் திருடியவுடன் சிங்கப்பூரிலிருந்து வர்ஷா விமானத்தில் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.