சாங்கி கோஸ்ட் சாலையில் நேற்று காலை கார் ஒன்று மரத்தில் மோதியதில் வாகனமோட்டி உயிர் இழந்தார். ஐவர் காயமடைந்தனர். இந்தச் சாலை விபத்து குறித்து நேற்று காலை 6.35 மணிக்கு தமக்கு தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம், இரண்டு துணை வாகனங்கள், ஐந்து ஆம்புலன்ஸ்கள், ஒரு சிவப்பு ரைனோ வாகனம் அனுப்பப்பட்டன. காரில் சிக்கிக்கொண்ட 21 வயது கடற்படை வீரர் யுக்கியோ மட்சோ என்ற ஓட்டுநரை இரும்பு வெட்டும் சாதனங்களைக் கொண்டு குடிமைத் தற்காப்புப் படையினர் விடுவித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அங்கிருந்த மருத்துவ முதலுதவிக் குழு அறிவித்தது.
அவரின் தந்தை ஜப்பானியர் என்றும் அவரின் தாயார் சிங்கப்பூரர் என்றும் சீன நாளிதழான லியன்ஹ வான்பாவ் நேற்று தெரிவித்தது. யுக்கியோ அவரது தாயாரின் 'சுபாரு' காரை அவர் ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டது. யுக்கிகோ மட்சோ சாதுவானவர் என்றும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவார் என்றும் அவரின் வீட்டு உதவியாளர் தெரிவித்தார். மட்சோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடல், கடல்துறையில் பயின்ற தாகவும் சென்ற ஆண்டுதான் சிங்கப்பூர் கடற்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விபத்தில் காயம் அடைந்த மேலும் ஐவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
ஐவரில் இருவர் சுயநினைவற்ற நிலையில் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த சாலையில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நூர் இஸ்கந்தர் சம்பவத்தை வீடியோ எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

