மனிதர்களின் 'ஸ்டெம் செல்' எனப்படும் மூல உயிரணுக்களில் இருந்து மூளையில் இருக்கக் கூடிய 'நியூரான்' எனப்படும் நரம்பணுக்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் புதிய வழிமுறையை உள்ளூர் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நரம்பணுக்களை மிகுந்த செயல் திறனுடன் உருவாக்க முடிவதால் 'ஆட்டிசம்' எனப்படும் மன இறுக்கம், 'ஸ்கிட்சோஃப்ரீனியா' எனப்படும் முரண்மூளை நோய் போன்ற நரம்பியல் பிரச்சினைகள், மனநலப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கான மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் அவை பயன்படுத்தப்படும்.
'டியூக் என்யுஎஸ்' மருத்துவப் பள்ளி, ஏ=ஸ்டாரின் சிங்கப்பூர் மரபணுக் கழகம், தேசிய நரம்பியல் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் 'காபார்ஜிக் (ஜிஎன்)' எனப்படும் ஒருவகை நரம்பணுக்களை உற்பத்தி செய் யும் முறையை உருவாக்கி உள்ளனர். மூளையில் 'ஜிஎன்' உருவாக்கத்தில் தொடர்புடைய மரபணுக் காரணிகளைக் கண்டறிந்து பலவிதமான மாறுபட்ட காரணிகளை ஒன்றிணைத்து ஆராய்ந்து மனித செயல்பாட்டுக்கான 'ஜிஎன்'களை ஆய்வாளர்கள் உருவாக்கினர்.

