முதன்முதலாக சிங்கப்பூருக்குளேயே பரவியதாகக் கருதப்படும் 'ஸிக்கா' கிருமித்தொற்றால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். அல்ஜுனிட் கிரசெண்ட்டில் உள்ள புளோக் 102ல் வசித்து வரும் 47 வயது மலேசிய மாது வான அவர் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார். 'ஸிக்கா' கிருமித்தொற்று பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு அவர் அண்மையில் பயணம் செய்யவில்லை; எனவே அவருக்கு 'ஸிக்கா' கிருமித் தொற்று சிங்கப்பூருக்கு உள்ளேயே ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 25ஆம் தேதி முதல் அவர் காய்ச்சல், சருமத் தடிப்புகள், கண்களில் வெண்படல அழற்சி ஆகியவற்றால் பாதிக்கப் பட்டிருந்தார். 26ஆம் தேதி பொதுமருத்துவரிடம் சிகிச்சை பெறச் சென்ற அவர் டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள தொற்று நோய் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு 'ஸிக்கா' கிருமி நோய்த்தொற்று இருப்பதாக நேற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல் நலம் சிறப்பாகத் தேறிவருவதாகக் கூறப்படுகிறது.

