சிங்கப்பூர் அதிபருக்குச் சேமிப்பைப் பாதுகாக்கும் அதிகாரங்கள் இருப்பதால் அவர் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ வலியுறுத்தியுள்ளார். அதிபர் தேர்தலின் அம்சங்கள் குறித்து அரசமைப்பு ஆணைக்குழுமுன் சாட்சியமளித்த பலர் முன்னைய நியமன அதிபர் முறைக்கு மாறலாம் என்ற யோசனையை முன்வைத்தனர். ஆனால் இது அதிபரை ஒரு சங்கடமான நிலைக்குத் தள்ளும். ஏனெனில் அப்போதிருக்கும் அரசாங்கம் சேமிப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்று எண்ணும்போது அதை எதிர்ப்பதில் அதிபருக்குச் சிரமம் இருக்கும் என்று நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியில் பிரதமர் லீ தெரிவித்தார்.
அப்படிப்பட்ட ஒரு நிலையில் அதிபருக்கு எதிராக புதிய அரசாங்கம், "இதைச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. எங்களுக்கு மக்களின் அதிகாரம் உள்ளது. தேர்தல் அறிக்கையை முன்வைத்து நாங்கள் தேர்தலில் வென்றுள்ளோம். இப்பொழுது இந்தப் பணத்தைச் செலவு செய்யக்கூடாது என்று எப்படிச் சொல்லலாம்!" "இது அதிபரை ஒரு இக்கட்டான நிலைக்கு இட்டுச்செல்லும்," என்று திரு லீ விளக்கினார். "நீங்கள் உண்மையிலேயே அதிகாரத்தைப் பயன்படுத்த நினைத்து முடியாது என்று கூறினால் அது எடுபடாது. ஆகை யால் இதற்கு இரு பாதுகாப்பு அம்சம் தேவை என்றால் அதற்கென தேர்தல் நடத்தப்படவேண்டும்," என்றார் அவர். சிலர் இதுபோன்ற பாதுகாப்பு தேவையில்லை என்றும் நாடாளுமன்றமே அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
சிங்கப்பூர் முதல் 25 ஆண்டுகளில் அந்த முறையைத்தான் கொண்டிருந்தது என்று பிரதமர் சுட்டினார். ஆனால் பல அரசுகள் அதிகாரங்கள் பகிர்ந்திருப்பதை உறுதி செய்துள்ளன என்ற திரு லீ அதற்கு உதாரணமாக கணிசமான அதிகாரங்களைக் கொண்ட மேல்சபையை அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் இருப்பதைச் சுட்டினார். "ஏதாவது ஒரு பெரிய தவறு ஏற்பட்டு அரசு முறையே கவிழ்ந்திராதபடி அரசியிலை நிலைப்படுத்தும் ஒரு கட்டமைப்பு அங்கு உள்ளது. "அதுபோன்ற ஒரு நிலைத்தன்மை வாய்ந்த கட்டமைப்பு நமக்கு தேவை. அதற்காகவே தெர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையைத் உருவாக்கியுள்ளோம்," என்று பிரதமர் லீ கூறினார்.

