செந்தோசாவில் திருக்கை மீன் தாக்கி தலைமை முக்குளிப்பாளர் மரணம்

செந்தோசாவில் திருக்கை மீன் தாக்கி தலைமை முக்குளிப்பாளர் மரணம்

2 mins read
fc0c026b-eb08-4d7d-a0bb-abe7cc91f735
-

சிங்கப்பூரில் இதுவரை நிகழ்ந்திராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. செந்தோசாவில் கடல் இனங்களின் காட்சிக் கூடமான "அண்டர்வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்" என்ற காட்சிக் கூடத்தில் தலைமை முக்குளிப்பாளராக விளங்கிய ஃபிலிப் சான் என்ற அறுபது வயது மதிக்கத்தக்க ஆடவர் திருக்கை மீன் தாக்கி மரணமடைந்துள்ளார். இந்தக் காட்சிக்கூடம் கடந்த ஜூன் மாதம் முதல் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், அங்கிருக்கும் கடல் இனங்களை அப்புறப்படுத்தி கடலுக்குள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஃபிலிப் சான். அப்பொழுது நேற்று முன்தினம், பிற்பகல் சுமார் 2.20 மணிக்கு அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

திரு ஃபிலிப் சான், திருக்கை மீனால் தாக்கப்பட்டவுடன், சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கடல் இனங்களின் காட்சிக் கூடமான "அண்டர்வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்" 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் அங்கு பணி புரிந்து வருவதாக அறியப்படுகிறது. இவர் அளித்துள்ள பேட்டிகளை வைத்துப் பார்த்தால் இவர் கடல் இனங் களோடு எப்படி ஒன்றித்து வாழ்ந்தார் என்பது தெரிய வரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தி நியூபேப்பர் நாளேடுகளின் செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

"அவை மிகவும் அமைதியானவை," என்று தி நியூபேப்பர் நாளேடுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிடும் இவர், அவற்றைத் தமது நண்பர் குழாம் என்று வர்ணிக்கிறார். அவற்றுக்குச் சிறப்பான சூழலைக்கொண்ட இருப்பிடத்தைத் தேடித் தர எண்ணம் கொண்டுள்ளோம். "அடுத்த முறை அவற்றைக் காணும் போது அவற்றை என்னால் அடையாளம் காண முடியாமல் போகலாம். "ஆனால், கடலுக்குள் நான் சென்றால் அவை என்னை அடையாளம் காண வாய்ப்புள்ளது," என்று கூறுகிறார் இவர். இவர் முக்குளிப்பாளர் ஆடை தரித்து திருக்கை மீன்களுக்கும் சுறா மீன்களுக்கும் அவற்றின் வாயிலேயே உணவைக் கொண்டு செல்வதைப் பார்ப்போர் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் படம் பிடிப்பதுண்டு என்று கூறப்படுகிறது.