வாகனங்களில் அதிக புகை கக்கியது, இயந்திரத்தை நிறுத்தாமல் வாகனத்தை நிறுத்தி வைத்தது போன்ற குற்றங்களுக்காக 25 வாகனமோட்டிகள் மீது தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் குற்றப் பதிவு செய்தனர். தேசிய சுற்றுப்புற வாரியம் உட்லண்ட்ஸ், மார்சிலிங், தெலுக் பிளாங்கா, புக்கிட் மேரா வட்டாரங்களில் நேற்றுக் காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வாகனம் சார்ந்த உமிழ்வுகளைக் குறைக்கும் பொருட்டும் சுத்தமான காற்றை உறுதிப்படுத்துவது பொருட்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாரியம் தெரிவித்தது. அதிகமாகப் புகை கக்கும் 12 வாகனங்கள் பிடிபட்டன. அவற்றில் நான்கு வெளிநாட்டு வாகனங்கள். நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் வாகன இயந்திரங்களை இயங்க விட்டதாக 13 வாகனங்கள் பிடிப்பட்டன. காற்றுத் தூய்மைக்கேட்டை குறைக்கும் பொருட்டு விளக்க ஏடுகளை வாரியத்தின் அதிகாரிகள் வாகனமோட்டிகளிடம் வழங்கினர். வாகனங்களை அடிக்கடி பாரமரிக்கும்படி வாரியம் வாகனமோட்டிகளைக் கேட்டுக்கொண்டது. பயன்பாட்டில் இல்லாதபோது வாகன இயந்திரங்களை நிறுத்தி வைக்குமாறும் வாரியம் கேட்டுக்கொண்டது.

