ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் வடக்குப் பகுதியில் ராணுவப் பயிற்சி வட்டாரம் ஒன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்து சிங்கப்பூர், ஆஸ்திரேலிய தற்காப்புத் துறைகள் இந்த ஆண்டு அக்டோபரில் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டன. அந்த உடன்பாட்டிற்கு இரண்டு தரப்புகளும் உறுதி பூண்டிருப்பதாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு தெரிவித்து இருக்கிறது. குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள ராணுவப் பயிற்சி இடத்திற்குச் சொந்தமான விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்க விரும்பவில்லை என்று அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இடம் 200,000 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. அது 23 விவசாயிகளுக்குச் சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டவுன்ஸ்வில் நகருக்கு அருகே திட்டமிடப்பட்டுள்ள அந்தப் பயிற்சி வட்டாரத்தை உருவாக்குவதன் தொடர்பில் ஆஸ்திரேலிய தற்காப்புத் துறையுடன் தான் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படப் போவதாக அமைச்சு குறிப்பிட்டு இருக்கிறது.