மின்சார ஸ்கூட்டரை ஓட்டிவந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஒரு வேன், அந்த ஸ்கூட்டர் மீது ஏறிவிட்டது. கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் அவர் தன் ஸ்கூட்டரிலிருந்து கீழே குதித்து இலேசான காயத்துடன் தப்பிவிட்டார். இந்தச் சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி ஞாயிறு நள்ளிரவு வாக்கில் இணையத்தில் சாலைப் பாதுகாப்பு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. ஒரு காரிலிருந்த படச்சாதனம் இந்தச் சம்பவத்தைப் படம் பிடித்தது. அப்பர் சிராங்கூன் ரோட்டில் இருக்கும் சாலைச் சந்திப்பு ஒன்றில் சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3.20 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் காணொளிப் படம் மூலம் தெரியவருகிறது.
மின்ஸ்கூட்டரில் வந்த ஓர் ஆடவர் பாதசாரி சாலைக்கடப்பு ஒன்றில் சென்றபோது ஒரு வேன் அந்தப் பகுதியில் வந்து திரும்பியதை அந்த 22 வினாடி காணொளி காட்டுகிறது. அந்த வாகனம் மின்ஸ்கூட்டர் மீது மோதியது. ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டரி லிருந்து கீழே குதித்து வேன் நேரடியாக தன் மீது மோதாமல் அந்த ஆடவர் தப்பிவிட்டார். ஸ்கூட்டர் வாகனம் நொறுங்கிவிட்டது. வேன் அந்த ஆடவரை மோதித் தள்ளியது. அந்த ஆடவர் மெதுவாக நடந்து சாலையில் கீழே அமர்ந்துவிட்டார். வேன் ஓட்டுநர் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் அமர்ந்திருந்த மின்ஸ்கூட்டர் ஓட்டுநரைப் போய் பார்த்தார். இந்தச் சம்பவத் தைப் பொறுத்தவரையில் அவசரகால அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்று போலிசும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சாலைச் சந்திப்பில் வேன் மோதி மின்ஸ்கூட்டர் நொறுங்கியது. அதை ஓட்டிவந்த ஆடவர் காயத்துடன் உயிர் தப்பினார். படம்: ஃபேஸ்புக் காணொளி