சிங்கப்பூரின் ஒன்பதாவது தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங் நேற்று இஸ்தானாவில் அதிபர் டோனி டான் முன்னிலையில் நடந்த சடங்கில் அதிகாரபூர்வமாகப் பதவி ஏற்றுக்கொண்டார். மூன்று ஆண்டு தவணைக் காலம் சேவையாற்றவிருக்கும் 63 வயது திரு வோங், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்ற உறுப்பினராகவும் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அரசாங்கத்தின் தலைமைச் சட்ட ஆலோசகர், பொது வழக்குரைஞர் பொறுப்பையும் ஜனவரி 14ஆம் தேதி ஓய்வுபெற்ற திரு வி.கே. ராஜாவிடமிருந்து அவர் ஏற்றுக் கொண்டார்.
தலைமைச் சட்ட அதிகாரியாகச் சேவையாற்றும் வாய்ப்பை கௌரவமாகக் கருதுவதாகத் திரு வோங் நேற்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். "தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் அதிகாரி கள், அவர்கள் ஆற்றும் பணி, அதில் வெளிப்படும் பற்றுதல், நிபுணத்துவம் ஆகியவற்றின் தரம் எனக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களோடு சேர்ந்து செயல்பட்டு, எனது முன்னோடிகள், குறிப்பாக எனக்கு முன்பாகச் சேவையாற்றி தலைமைச் சட்ட அதிகாரி அலுவல கத்தைப் பற்பல திட்டப்பணிகளுடன் உருமாற்றிய திரு வி.கே. ராஜா, நிலைநாட்டிய அடிப்படைகளை மேன்மேலும் முன்னெடுத்துச்செல்ல ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்," என்றார் அவர்.