பிஎஸ்ஏ சிங்கப்பூர் துறைமுக நிறுவனம் தஞ்சோங் பகாரி லிருந்து துவாஸுக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டது. துவாஸில் கட்டப்படும் மிகப்பெரிய துறைமுகத்தில் கொள்கலத் துறைமுக நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இடப்பெயர்வு நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களில் சில ஊழியர்களைப் பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு பிஎஸ்ஏ அனுப்பியதாக ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் அறிகிறது. தானியக்கச் சாதனங் களை இயக்குதல் போன்ற புதிய திறன்களை அவர்கள் அங்கே கற்றுக் கொள்வார்கள். ஊழியர்கள் யாரும் ஆட்குறைப்பு செய்யப்படவில்லை. தஞ்சோங் பகார், கெப்பல், பூலாவ் பிரானி துறைமுகங்களின் குத்தகைக் காலம் 2027ல் காலாவதியாகிறது. அதற்குள் துறைமுக நடவடிக்கைகள் துவாஸுக்கு முழுமையாக இடம்பெயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் அடுத்த தலைமுறை துறைமுகமாகத் திகழவிருக்கும் புதிய துவாஸ் துறைமுகத்தில் வழக்கமான அளவிலான 65 மில்லியன் கொள்கலன்களை ஓராண்டில் கையாளலாம். தற்போது ஆண்டுக்கு 40 மில்லியன் கொள் கலன்கள் கையாளப்படுகின்றன. பாசிர் பாஞ்சாங் துறைமுக நடவடிக்கைகள் அனைத்தும் 2040ஆம் ஆண்டுக்குள் துவாஸுக்குச் சென்றுவிடும். இங்குள்ள 700 துறைமுக ஊழியர்களுக்கு உதவி புரிய சிங்கப்பூர் துறைமுக ஊழியர் சங்கம் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் என்டியுசியின் தலைமைச் செயலாளருமான திரு சான் சுன் சிங் ஜனவரி 1ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்தார்.
"நமது துறைமுகங்கள் நீண்டகால வளர்ச்சியடைய வலுவான சாத்தியத்தைக் காண்கிறோம். துறைமுக ஊழியர்களுக்காக மேம்பட்ட வேலைகளை உருவாக்கும் அதே வேளையில், தேவையான புதிய கொள்ளளவை நிறைவேற்ற மேன்மேலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தவேண்டும்," என்று பின்னொரு பதிவேற்றத்தில் அவர் குறிப்பிட்டார்.