சிங்கப்பூரின் பொது சுகாதாரப் பராமரிப்புத் துறை அடுத்த ஆண்டில் பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட உள்ளது. தற்போது வட்டார சுகாதாரப் பிரிவின் எண்ணிக்கை ஆறாக உள்ளது. இவை மூன்று குழுக்களாக ஒன்றிணைக்கப்படும். இதற்குரிய நடைமுறை அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சிங்கப்பூரின் மேற்குப் பகுதியைத் தளமாகக் கொண்ட புதிய பலதுறைக் குழுமம் ஒன்றும் உருவாகும். மூன்று குழுக்களில் இடம் பெறும் ஒவ்வொரு பிரிவும் முழு அளவிலான சேவைகளை வழங் கும். தீவிர மருத்துவப் பராமரிப்பு, அடிப்படைப் பராமரிப்பு, சமூகப் பராமரிப்பு உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும். ஒவ்வொரு குழுவும் ஒரு மருத் துவப் பள்ளியைக் கொண்டிருக்கும்.
சுகாதாரப் பராமரிப்புத் துறை இவ்வாறு உருமாற்றத்தைச் செய்து கொண்டிருந்தாலும் நோயாளிகள் எப்போதும்போல பொது சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெறுவதில் பாதிப்பு இராது. வருங்காலத்தில் நோயாளிகள் தடையற்ற பராமரிப்பு வசதிகளைப் பெறமுடியும் என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
ஜூரோங் சுகாதாரச் சேவைகளில் இடம்பெற்றுள்ள இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை. தேசிய பல்கலைக்கழக சுகாதாரப் பிரிவோடு இது ஒன்றிணைய உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்