போலிஸ் அனுமதி இல்லாமல் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதோ பங்கேற்பதோ சட்டத்துக்கு எதிரானது என போலிஸ் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. பேச்சாளர் சதுக்கத்திலும் மற்ற இடங்களிலும் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து தங்களுக்குத் தெரியும் என நேற்று வெளியிடப்பட்ட போலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பேச்சாளர் சதுக்கத்தில் போலிஸ் அனுமதி இல்லாமல் நடக்கும் கூட்டங்களில் சிங்கப் பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே பங்கேற்கமுடியும் என்றும் அத்தகைய கூட்டமும் பேச்சாளர் சதுக்கத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் அறிக்கை நினைவுபடுத்தியது. கூட்டங்களை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் சிங்கப் பூரின் சட்டதிட்டங்கள் பின்பற்றப் படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது என்றும் அறிக்கை கூறியது.
சிங்கப்பூருக்கு வருகை அளிக்கும் வெளிநாட்டவர் அல்லது இங்கு வசிக்கும் வெளிநாட்டவர் சிங்கப்பூரின் சட்டங்களைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்றும் அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள அரசியலை இங்கு கொண்டு வரக்கூடாது என்றும் போலிஸ் அறிக்கை விவரித்தது. சட்டதிட்டங்களை மீறுவோர் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்தை மீறுவோர் வெளிநாட்டு ஊழியர் களாக இருந்தால் அவர்களது வேலை அனுமதியோ விசாவோ உடனடியாக ரத்து செய்யப்படக்கூடும் என்றும் நேற்று வெளியிடப்பட்ட போலிஸ் அறிக்கை எச்சரித்தது.