வரி செலுத்த தவறியதற்காக $1.4 மி. அபராதம்

வரி செலுத்த தவறியதற்காக $1.4 மி. அபராதம்

1 mins read

வரி செலுத்தாமல் 118,000 சோஜு மதுபான பாட்டில்களை சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்த குற்றத்திற்காக சிங்கப்பூர் நிறுவன இயக்குநருக்கு நேற்று $1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. தென் கொரியாவின் அரிசி சார்ந்த மதுபானம் சோஜு. அந்த மதுபானத்தை இறக்குமதி செய்த நான்கு குற்றசாட்டுகளை திரு டேவிட் சோ, 48 ஒப்புக்கொண்டார். அவருக்குத் தீர்ப்பு வழங்கியபோது அவர் மீது சுமத்தப்பட்ட மேலும் 16 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

சோ ஃபெய் இண்டர்னேஷனல் டிரேடிங் நிறுவத்தின் இயக்குநரான திரு டேவிட், அக்டோபர் 2013 முதல் செப்டம்பர் 2015 வரை இரு முறை சோஜு மதுபான பாட்டில்களை சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்துள்ளார். அவற்றுக்கு வரி செலுத்தாமல் இருக்க திரு டேவிட் அவரது முகவரை தாம் இறக்குமதி செய்யும் பானங்கள், மது அல்லாத அரிசி சார்ந்த பானங்கள் என நம்பவைத்து அவ்வாறே அவரை சிங்கப்பூர் சுங்கத் துறையில் பதிவு செய்ய வைத்துள்ளார். திரு டேவிட் இறக்குமதி செய்த மதுபான பாட்டில்களுக்கு $635,190 வரியும் $49,230 ஜிஎஸ்டியும் செலுத்தியிருக்க வேண்டும்.