வகுப்பறையில் பையனை அறைந்த கடைக்காரருக்கு $3,500 அபராதம்

வகுப்பறையில் பையனை அறைந்த கடைக்காரருக்கு $3,500 அபராதம்

1 mins read

ஒன்பது வயது பையனை கன்னத்தில் அறைந்ததற்காக அங்காடிக்கடைக்காரர் ஒருவருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. அந்தப் பையன் தன்னை அலைக் கழித்ததாக அந்த ஆடவரின் மகள் தெரிவித்தார். அதனை யடுத்து அந்த 47 வயது ஆடவர் பையனைத் தாக்கினார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுவன் யார் என்பது தெரியக்கூடாது என்பதால் அந்த ஆடவரின் பெயரைக் குறிப்பிட முடியவில்லை. காயம் விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அத்துமீறி நுழைந்ததாகக் கூறும் வேறொரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பையனின் வகுப்பறையில் நிகழ்ந்ததாகவும் தன்னை அந்த ஆடவர் அறைந்ததும் பையன் அழுதுவிட்டதாகவும் கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துவிட்டதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பையன் கிளமெண்டி பலதுறை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்தப் பையனின் இடதுபுற தாடையில் இலேசான வீக்கம் இருந்தது தெரியவந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.