நொவினா சூட்ஸ் சம்பவம்; கொலை, தற்கொலை என தீர்ப்பு

நொவினா சூட்ஸ் சம்பவம்; கொலை, தற்கொலை என தீர்ப்பு

1 mins read

நொவினா சூட்ஸ் கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டுத் தொகுதியில் 2016 அக்டோபர் 22ஆம் தேதி வாங் சான் ஃபூ, 46, என்பவர் 13வது மாடியிலிருந்து கீழே குதித்தார். அவருடைய இரண்டு பிள்ளைகளும் அதை கண்ணெதிரே பார்த்தனர். அந்தப் பிள்ளைகள் தன் தந்தையைச் சந்திப்பதற்காக அந்த அடுக்குவீட்டுத் தொகுதியின் கீழே காத்திருந்தனர். தந்தை கீழே குதித்ததும் இந்த விவகாரம் போலிசுக்கு சென்றது. போலிசார் வந்து அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தது. அங்கு திருவாட்டி இங் சூ சான், 44, என்ற மாது ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவர் உடலில் பல குத்துக்காயங்கள் காணப்பட்டன. இந்தச் சம்பவம் கொலை, மற்றும் தற்கொலை என்று நேற்று அரசாங்க மரண விசாரணை அதிகாரி மார்வின் பே தீர்ப்பளித்தார். திருவாட்டி இங் கொலையில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக யூகிக்க எந்தக் காரணமும் இல்லை என்றார் அவர். திருவாட்டி இங்கை அவருடைய கணவர்தான் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்றும் பிறகு அவர் கீழே குதித்துவிட்டார் என்றும் மரண விசாரணை அதிகாரி தீர்ப்பில் தெரிவித்தார்.