மின்சாரக் கட்டணத்தை ஒப்பிட புதிய இணையத்தளம் துவக்கம்

மின்சாரக் கட்டணத்தை ஒப்பிட புதிய இணையத்தளம் துவக்கம்

1 mins read

மின்சாரத் துறையில் போட்டித்தன்மை அதிகரித்து வரும் வேளையில் மின்சாரக் கட்டணத்தை ஒப்பிட்டுப் பார்க்க பயனீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இணையத்தளம் ஒன்றைப் புதிய நிறுவனம் ஒன்று தொடங்கி வைத்துள்ளது. தற்போது மின்சாரத்தை விற்கும் எட்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த மாதக் கடைசிக்குள் மேலும் ஏழு நிறுவனங்கள் மின்சார விற்பனை சந்தைக்குள் நுழைய இருக்கின்றன. புதிய இணையத்தளம் இல்லையென்றால் மின்சாரக் கட்டணத்தை ஒப்பிட பயனீட்டாளர்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் இணையப்பக்கத்துக்குச் செல்லவேண்டும்.

மின்சாரத்தை விற்கும் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கட்டணத்தைத் தேடி அறிந்துகொள்ள எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை 'எலெக்ட்ரிஃபை' என்று அழைக்கப்படும் புதிய இணையத்தளம் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குக் குறைக்கிறது. கட்டணத்தை ஒப்பிட்ட பிறகு புதிய இணையத்தளம் மூலம் மின்சாரத்தை விற்கும் நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மின்னிலக்க கட்டணம் செலுத்தும் முறை வாயிலாக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். தற்போதைய நிலையின்படி மாதத்துக்கு 2MWh அளவு மின்சாரம் பயன்படுத்தும் துறைகளும் வர்த்தகங்களும் எஸ்பி சர்வீசஸிடம்தான் மின்சாரத்தை வாங்கவேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு உட்படாமல் மற்ற நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரத்தை வாங்கலாம். அடுத்த ஆண்டு மத்தியில் மின்சாரச் சந்தை முழுமையாகத் தாராளமயமாக்கப்படும். இதன் மூலம் மேலும் 200,000 வர்த்தகங்களும் 1.3 மில்லியன் குடியிருப்புப் பயனீட்டாளர்களும் மற்ற நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கலாம்.