போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 87 பேர் கைது

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 87 பேர் கைது

1 mins read

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நாடாளவிய அளவில் மேற்கொண்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 87 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கள் முதல் நேற்றுக் காலை வரையில் இடம்பெற்ற நடவடிக்கையில் 95 கிராம் ஐஸ், 41 கிராம் ஹெராயின், 58 யாபா மாத்திரைகள், கெட்டாமின், எக்ஸ்டசி மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. சிங்கப்பூர் போலிஸ் படை ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 28, 29 வயதுகளில் உள்ள இரு சிங்கப்பூரர்கள் தெக் வாய் பகுதியில் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் 30 வயது பெண்ணும் 20, 21 வயதுகளை உடைய ஐந்து போதைப் புழங்கிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் சிங்கப்பூர் ஆண்கள், இருவர் சிங்கப்பூர் பெண்கள். போதைப் பொருள் குற்றத்தின் பேரில் கைதாகும் இளையர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி நிலையம் வரை பயிலும் 151 இளையர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2014ல் 84 ஆகவும் 2015ல் 1124 ஆகவும் இருந்தன. போதைப் பொருள் நடவடிக்கை தொடர்பாக கைதானவர்கள் குறித்த விசாரணை தொடர்கிறது.