இன, சமய ஒற்றுமையை வலுப்படுத்த பிரதமர் வலியுறுத்து

இன, சமய ஒற்றுமையை வலுப்படுத்த பிரதமர் வலியுறுத்து

1 mins read

பல்வேறு இன, சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் சமூக, சமயத் தலைவர்கள் தொடரவேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி இருக்கிறார். மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் கிட்டத்தட்ட 300 சமூக, சமயத் தலைவர் களுடன் சமூகப் பிணைப்பு தொடர்பில் நேற்று நடந்த கலந் துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இன, சமய ஒற்றுமை சிங்கப் பூரில் வலுவாக இருக்கிறது என்ற திரு லீ, அந்த விலை மதிப்புமிக்க ஒற்றுமை தற்செய லாக நிகழ்ந்ததல்ல என்றும் கடந்த பல ஆண்டுகளாக ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழ கற்றுக்கொண்டுள்ளோம் என்றும் வெவ்வேறு இனங்களும் சமயங்களும் கொடுத்துப் பெற் றுள்ளவை ஏராளம் என்றும் சொன்னார்.

அதே நேரத்தில், சிங்கப்பூர் அமைதிச் சோலையாக இருந்தா லும் அபாயகரமான உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று பிரதமர் கூறினார். பாரிஸ், நீஸ், மான்செஸ்டர், லண்டன் போன்ற நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக் குதல்களும் ஈராக், சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போர்களும் இதை உணர்த்துகின்றன என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் தனிமனிதர்கள் சுயமாகத் தீவிரவாதப் போக்கிற்கு மாறுவது தொடர்கிறது என்றும் அதற்கு ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தங்களும் மத்திய கிழக் கில் நடந்துவரும் சண்டைகளும் உந்துதலாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.