அப்பர் புக்கிட் தீமா சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த 48 வயது ஆடவர் கொள்ளை நடந்த நான்கு மணி நேரத்திற்குள் பிடிபட்டார். அந்த பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த 22 வயது காசாளரிடமிருந்து $1100 வெள்ளிக்கு மேல் திருடப்பட்டது. பெட்ரோல் நிலையம் ஒன்றில் இது போன்ற திருட்டுச் சம்பவம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது. இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி நேற்று முன்தினம் பிற்பகல் 12.50 மணிக்குப் போலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பெட்ரோல் நிலைய மேற்பார்வை யாளர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருந்தார். சந்தேக நபர் அந்த 22 வயது காசாளரை மிரட்டி பணப் பெட்டி யிலிருந்த பணத்தை பிளாஸ்டிக் பையில் வைத்து தம்மிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட நபர், துப்புரவு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தலைக் கவசம், கண்ணாடி, கையுறை அணிந்து, பதிவு எண்கள் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மூலம் அந்த ஆடவர் தப்பியுள்ளார்.
219 அப்பர் புக்கிட் தீமா சாலையில் உள்ள பெட்ரோல் நிலைய கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், அவர் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் ஆகியவற்றைச் செய்தியாளர் கூட்டத்தின்போது போலிசார் காட்சிக்கு வைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

