சீனாவில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த ஜுசியாவ்ஜோவ் வட்டாரத்தைவிட்டு சிங்கப்பூரை சேர்ந்த இரண்டாவது சுற்றுப் பயணிகள் குழு வெளியேறிவிட்டது. அந்தக் குழுவில் 20 பேர் இருந்ததாகவும் அவர்களில் யாருக்கும் காயம் இல்லை என்றும் எல்லாரும் நிலநடுக்கப் பகுதியைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் சான் பிரதர்ஸ் சுற்றுலா நிறுவனம் தெரிவித்ததாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அவர்கள் செங்டு நகருக்கு கிளம்பியதாகவும் நேற்று பிற்பகல் நேரத்தில் அந்த நகரை அவர்கள் அடையவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரை சேர்ந்த இந்த சுற்றுப் பயணிகள் செங்டுவிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் திரும்பவிருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் தங்கள் சீன சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு சிங்கப்பூர் திரும்ப விரும்புகிறார்களா அல்லது சீன சுற்றுப் பயணத்தைத் தொடர விரும்புகிறார்களா என்பது அவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சான் பிரதர்ஸ் நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

