போலியான போலிஸ் இணையப்பக்கத்தில் தமது வங்கி கணக்கு எண் விவரங்களை அளித்த 45 வயது மாது $31,500 தொகையை இழந்தார். தனக்கு தெரியாமலே தனது கணக்கிலிருந்து இத்தொகை வேறு கணக்குக்கு மாற்றப்பட்டது குறித்து அம்மாது டிசம்பர் 13ஆம் தேதி போலிசில் புகார் செய்தார். முன்னதாக போலிஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர், மாதை தொலைபேசியில் அழைத்து சட்ட விரோத நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப் படுவதாகக் கூறினார்.
மாது சிங்கப்பூரிலிருந்து வெளிநாடு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆள் கூறினார். பின்னர் வேறொருவர் அழைத்து, சிங்கப்பூர் போலிசின் இணையப்பக்கம் போலிருந்த போலி பக்கத்துக்கு அவரைப் போகச் சொல்லி உள்ளார். அதில் மாதின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்கச் சொல்லி உள்ளார். அத்துடன் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணையும் அளித்துள்ளார். வங்கி அவரை அழைத்து போலிசில் புகார் செய்யுமாறு கூறிய பின்னரே தாம் ஏமாற்றப்பட்டிருப்பது பற்றி மாது அறிந்தார். சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.

