சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் நிகழ்ந்த நான்கு கார்களும் ஒரு டாக்சியும் சிக்கிய விபத்தில் ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 'ரோட்ஸ்.எஸ்ஜி' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று, சிவப்பு நிற கார் கறுநீல நிற காரின் பின்பகுதியில் மோதுவதையும் அதனைத் தொடர்ந்து சுழன்று அடுத்த தடத்திற்குச் செல்வதையும் காட்டியது.
அன்றைய தினம் மாலை 4.35 மணியளவில் இச்சம்பவம் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித் தது. மேலும், இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 24 முதல் 55 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள், நான்கு ஆடவர் ஆகியோர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

