போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட கானா நாட்டைச் சேர்ந்த ஆடவரின் மரண தண்டனை, கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அவர் முன்னதாக மரண தண்டனையிலிருந்து விடுபட அதிபர் கருணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டதால் அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது. 39 வயதான அக்போஸே„ எனும் அந்த ஆடவர் சிங்கப்பூர் வந்தபோது, தனது பயணப் பையில் 1.63 கிலோ கிராம் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆக உயர்ந்த தண்டனைக்குரிய குற்றம் புரிந்திருந்ததால், அக்போஸே„ நீதிமன்ற விசாரணையின்போது அவர் சார்பில் வாதாட வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார் என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. அக்போஸே„, அக்ராவிலிருந்து துபாய்க்கு விமானம் வழி 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி பயணம் செய்து, பின்னர் சிங்கப்பூருக்கு பயணமானார். அடுத்த நாள் அவர் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தார். இங்கு ஐந்து இரவுகள் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சோதித்த அதிகாரிகள் அவரது பையில் போதைப் பொருள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

