உட்லண்ட்சில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, நான்கு கார்களுக்கும் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் இடையே நடந்த விபத்தைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 32க்கு அடுத்துள்ள உட்லண்ட்ஸ் அவென்யூ 5ஐ நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் அவென்யூ 3ல் விபத்து நடந்தது.
விபத்து குறித்து இரவு சுமார் 9 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 32 வயது பெண் ஓட்டுநரும் மோட்டார் சைக்கிளோட்டியான 57 வயது ஆடவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்ததை சமூக ஊடகங்களிலுள்ள படங்களும் காணொளிகளும் காட்டு கின்றன. போலிஸ் விசாரணை தொடர்கிறது.

