இன்டஸ் ரோட்டை நோக்கிச் செல்லும் கேஞ்சிஸ் அவென்யூவில் நேற்று முன்தினம் விழுந்து சாலையை மறைத்துகொண்டிருந்த மரக்கிளையை அகற்ற 20க்கும் மேற்பட்ட வழிபோக்கர்கள் உதவி செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சாலையின் குறுக்கே விழுந்த பெரிய மரக்கிளை, சாலையின் இரு தடங்களை மறைத்ததால், அங்கு சுமார் 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று ஷின்மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்த வழியே சென்ற வாகனமோட்டிகளும் பயணிகளும் தங்கள் வாகனங்களிலிருந்து இறங்கி கிளையை அகற்ற முயன்றனர்.
அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஐந்து நிமிடத்தில் மரக்கிளையைச் சாலையிலிருந்து அகற்றியதால், போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியது. இரவு 9 மணியளவில் சம்பந்தப்பட்ட அமைப்பின் ஊழியர்கள் சிலர் மரக்கிளையை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

