மரின் டிரைவில் உள்ள புளோக் 64ன் ஒன்பதாம் மாடியில் இருந்து வீட்டுப் பொருட்களை வீசியெறிந்த 56 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக் கிறார். தட்டுகள், கிண்ணங்கள், வேறு சில கண்ணாடிப் பொருட்கள் வீசி எறியப்பட்டதாக லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது. மரின் பரேட் வட்டாரத்தில் நடந்த அந்தச் சம்பவம் பற்றிய தகவல் காலை 6.45 மணிக்குக் கிடைத்ததாகப் போலிசார் கூறினர். சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவத்தை நான்காவது மாடியிலிருந்த 32 வயது பணிப்பெண் நடந்தததைக் கண்டதாக வான்பாவ் குறிப்பிட்டது.
காலை 6.30 மணிக்கு எழுந்த பிறகு, வெளியிலிருந்து இரைச்சலைக் கேட்டதாக அந்தப் பணிப்பெண் தெரிவித்தார். வெளியே எட்டிப் பார்த்ததில், அந்த ஆடவர் குறைந்தது 10 பொருட்களைப் பொது நடைபாதையிலிருந்து வீசிக்கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார். பணிப்பெண் உடனே போலிசாரை அழைக்க அவர்கள் காலை 7 மணி வாக்கில் சம்பவ இடத்தை அடைந்தனர். போலிஸ் அதிகாரிகளைக் கண்ட ஆடவர், தனது வீட்டுக் குள் தன்னைப் பூட்டிக்கொண்டார். அதிகாரிகள், அவரது வீட்டுக் கதவை இடித்துத் தள்ளி, ஆடவரைக் கைது செய்ததாக வான்பாவ் தெரிவித்தது.

