கழிவறையில் பெண்ணைப் படம்பிடித்த ஆடவர் கைது

1 mins read

சிம் எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழக வளாகத் தின் நான்காம் மாடி கழிவறையில் குமாரி லியின் லீயை தொலைபேசிவழி படம் பிடித்த குற்றத்திற்காக 21 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை நடந்த இச்சம்பவத்தில் தான் இருந்த குறுவறைக்கு மேல் யாரோ ஒருவர் தொலைபேசியைப் பிடித்துக் கொண்டிருந்ததை மாணவி லியின் லீ பார்த்தார். உடனே, வெளியில் வந்த அவர், கழிவறை வெளியே தன் நண்பருடன் காத்திருந்து சிறிது நேரம் கழித்து வெளியேறிய ஆடவரை வழிமறித்துப் பெண்கள் கழிவறையில் அந்த ஆடவர் இருந்ததற்கான காரணத்தைக் கேட்டார். தனக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் தெரியாமல் உள்ளே நுழைந்ததாகவும் அவர் கூறியதாக அறியப்படுகிறது. கழிவறை நான்காவது மாடியில் இருந்தாலும் தனக்கு இரண்டாவது மாடியில் வகுப்புகள் இருந்ததாக ஆடவர் கூறியதாகவும் குமாரி லீ தெரிவித்திருந்தார். ஆடவர் கைது செய்யப்பட்டு, விசாரணை தொடர்கிறது.