சிங்கப்பூர் குடியரசு விமானப்படை சனிக்கிழமையன்று காலையில் சாகசக் காட்சி நடத்தியதைத் தொடர்ந்து, மரினா பே உல்லாசப் படகு நிலையத்தின் அலங்காரக் கூரையின் சட்டங்கள் கழன்றுவிட்டன. சில சட்டங்கள் கழன்றுவிட்டதாகவும் ஆனால் அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் பாதிப்படைந்த சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் அந்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிபட தெரிவித்தார். பிற்பகலில் நடந்த இரண்டாவது ஆகாய சாகசம் காரணமாக வேறு பிரச்சினை ஏதும் இல்லை என்றார் அவர்.
இந்தச் சம்பவம் காரணமாக உல்லாச கலன்களின் வருகையோ புறப்பாடோ பாதிக்கப்படவில்லை என்று வான் பாவ் செய்தித்தாள் குறிப்பிட்டது. மரினா பராஜ் விமானப்படை சாகசம், விமானப்படையின் பொன்விழாவை நினைவுகூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 20க்கும் அதிகமான விமானங்கள் கலந்துகொண்டன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கும் பிற்பகல் 2.30 மணிக்கும் 30 நிமிடங்களுக்கு இரண்டு சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின.

