தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்டார்ஹப், அதன் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும். தற்போது அந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 2,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தொலைத்தொடர்பு துறையில் நிலவும் புதிய சவால்களையும் இடையூறுகளையும் ஈடுசெய்யும் நோக்கில் ஸ்டார்ஹப் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
"நிறுவன மறுஆய்வு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடிந்தவுடன் அது தொடர்பான முடிவுகள் ஊழியர்களிடம் தெரிவிக்கப்படும். ஆனால், இந்நடவடிக்கைகள் முடிவடைவதற்கு முன்பாக இது குறித்து மேல் விவரங்களைத் தெரிவிக்க இயலாது," என்று அந்நிறுவனம் பிசினஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியது. ஸ்டார்ஹப் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் கணக்கில், ஊழியர்களுக்கான செலவு 15 விழுக்காடு அதிகரித்து $84.7 மில்லியனை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.