கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சிறப்பு நிகழ்ச்சி வட்டாரங்களில் ஆளில்லாத வானூர்திகளைப் பறக்கவிட்டதற்காக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு பிறகு கடுமையாக எச்சரிக்கப் பட்டனர். போலிஸ் அறிக்கை ஒன்றில் நேற்று இதனை தெரிவித்தது. கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பகுதியான நார்த் பிரிட்ஜ் ரோட்டில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆளில்லாத வானூர்தி ஒன்று ஒரு கட்டடத்தில் மோதிவிட்டது. அது பற்றி போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் தொடர்பில் 25 வயது ஆடவர் கைதானார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது முறையே, மரினா பராஜ் சிங்கப்பூர் ஃபிளையர் பகுதிகளை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி வட்டாரத்தில் ஆளில்லாத வானூர்திகளை வைத்து இருந்ததற்காகவும் இயக்கியதற்காகவும் 32 மற்றும் 49 வயதுள்ள இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த மூன்று சம்பவங்கள் பற்றி புலன்விசாரணையை போலிஸ் முடித்து இருக்கிறது. மூவருக்கும் கடுமையான எச்சரிக்கைகளை போலிஸ் விடுத்தது.

